Monday 26 July 2010

"தொழில், பிச்சை எடுப்பதே !"

"தொழில், பிச்சை எடுப்பதே !"

"யாசகம் கேட்பவர் குதிரை மீது ஏறி வந்து கேட்டாலும், அவருக்கு கொடுங்கள்" என்றும்; "மேல் கை (கொடுக்கும் கை), கீழ் கையை (வாங்கும் கையை) விடச் சிறந்தது" என்றும் இஸ்லாம் உபதேசிக்கிறது.
அதாவது, தர்மம் செய்வதை ஆர்வமூட்டி, மறுமையில் நல்லவற்றை அடைய வழி செய்கிறது இஸ்லாம். உண்மை இவ்வாறிருக்க - தற்போதைய சூழல், நம்மை மிகவும் சலிப்படைய செய்வதால்தான் இப்படி ஒரு தலைப்பே!.

சமீபகாலத்திய பிச்சைக்காரர்கள் பின்பற்றும் முறை ஒருவித marketing strategy போலவே தோற்றம் தருவதோடு நம் சிந்தனைகளையும் பலவாறாக கிளறி விட்டுக்கொண்டு இருக்கிறது . நல்ல தேக ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை உள்ள எத்தனையோ ஆட்கள் நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்பதை வழமையாக கொண்டு இருப்பதை காணும்போது, 'இது ஒரு Lucrative business போலும்' என்று எண்ணத் தோன்றுகிறது.
பிச்சைக்காரர்கள் முன்பெல்லாம் தனி ஆட்களாகத்தான் வருவார்கள். ஆனால், இப்போது மூன்று அல்லது நான்கு பேர்களாக, ஒரு குழு அமைத்துக் கொண்டது போலவே, பிச்சைக்கேட்க வருகிறார்கள். ஒருவருக்கொருவர் உறவினர் என்றும் சொல்லிவிட முடியாது. பல பகுதிகளில் இருந்து வந்து இணைந்து கொண்டவர்களே இவர்கள்! . இந்த குழு - பிச்சை கேட்க ஒரு தெருவில் நுழைந்ததும்- முதல் வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு, அதற்கு எதிர்த்த பக்கத்து வீடு என்று எல்லோர் வீட்டு கதவுகளையும் தட்டுகின்றார்கள். அத்தனை வீட்டிலிருந்தும் காசு வரும்போது, "நாங்கள் மூனு பேர் (அல்லது நாலு பேர்) இருக்கிறோமே" என்கிறார்கள். எல்லோர் வீட்டு ஒட்டுமொத்த கலெக்ஷனையும் வாங்கிக்கொண்டு, அவர்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.
இன்னும் சில பிச்சைக்காரர்கள், நமக்குக் கடன் கொடுத்த கடன்காரர்கள் போல் நம் வீட்டுக் கதவை உடைக்கிறார்கள்! யாரோ எவரோ என்று அவசரமாக வந்து கதவைத் திறந்து பார்த்தால், நிற்பவர் பிச்சைக்காரர்! வீட்டுக்காரரின் முகத்தில் கோபம் கொப்பளிக்கும்; பிச்சைக்காரரோ பல்லை இளிப்பார்.
சில சமயங்களில் நாமே கவனித்து இருக்கலாம்- அதாவது, பிச்சைக்காரர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நிற்பார்; தொழுகை நேரத்திலும், அவரே- பள்ளிவாசலுக்கு வெளியேயும் நிற்பார்; அவரே- ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து கதவை தட்டுவதோடு, வழியில் போவோர் வருவோரையும் விட்டு விடுவதில்லை! (இவர் வழி தனி வழி போலும்!)
குடை மற்றும் பூட்டு repair செய்யும் ஒருவர் இருக்கிறார். வெள்ளிக்கிழமைகளில், தன் நிஜ தொழிலுக்கு லீவு விட்டுவிட்டு, தன் தலையில்- என்ன ஷோக்காக- ஒரு முண்டாசைக் கட்டிக்கொண்டு, "அல்லா! ரசூலுல்லா!" என்று நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்கிறார். அதே ஆளை கடைத் தெருவில் பிச்சை கேட்பதையும் பார்க்கலாம்- சற்று நொண்டி நொண்டி நடந்து வருவார்!
நிரம்ப தைரியம் உள்ள பிச்சைகாரர்களும் இருக்கவே செய்கிறார்கள்- வீட்டின் கதவு திறந்திருந்தால், வீட்டுக்குள்ளேயே உரிமையோடு வந்து விடுவார்கள்! (அவர் தம் உரிமையை நிலைநாட்டுகிறாராம்! !) ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை ஏதோ ஒரு புழு, பூச்சியை போல் கேவலமாகப் பார்க்கிறார்கள். இவர்கள் 'பஞ்சத்துக்கு ஆண்டிகளா அல்லது பரம்பரை ஆண்டிகளா?!' என்று நம்மை அல்லல்பட வைத்து விடுவார்கள். .
சில பிச்சைக்காரர்கள்- very smart ஆகவும் இருக்கிறார்கள். கொடுத்த காசை வாங்கிக்கொண்டு, "மதியம் வரேன், சாப்பாடு கொடுங்கள்" என்று பல்லை இளித்து, உரிமை பாராட்டுவார்கள். இன்னும் சிலர் காசை வாங்கிய பின்னர், பழசான சட்டை அல்லது கைலி இருந்தால் கொடுங்களேன் என்றும் கேட்கிறார்கள்.
சில நேரங்களில் இவர்களின் systems of begging பற்றி ஆராயும்போது, நமக்கே ஆச்சரியம் உண்டாகிறது. பஸ்சில் இருந்து இறங்குகின்றதில் (main bus stand) இருந்து - வழியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் என்று தொடங்கி, high school தெரு, முத்தையா முதலியார் தெரு, மிர்ஜா மியான் தெரு , பெரியத் தெரு, இதற்கு இடைப்பட்ட சந்துகள், முடுக்குகளில் உள்ள வீடுகள், மீராப் பள்ளி தெரு, காஜியார் தெரு என்று இப்படியே போய் - கும்மத் பள்ளி தெருவில் ஒரு round-about செய்துவிட்டு வாத்தியா பள்ளி தெருவில் தன் தொழிலை முடித்தவாறு - அந்த தெருவின் பஸ் நிறுத்தத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு பயணம் மேற்கொண்டு விடுவார்கள். அன்றைக்கு, தீடீரென்று, ஏதும் government bus strike ஏற்பட்டு விட்டால்- வாத்தியா பள்ளி தெருவின் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில்- 30 அல்லது 40 ரூபாய்களை கொடுத்து- main bus stand போய், அங்கிருந்து private root பஸ்சில் பயணித்து விடுவது என்பது வேறு கதை. இவர்கள், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊரை இலக்காக்குபவர்கள் என்றால் மிகையாகாது.

சில வேளைகளில் நம்மிடம் சில்லரை இல்லாதபோது (ஏன், சட்டைப்பையில் சல்லிகாசே இருக்காது!) "சில்லறை இல்லையே" என்று சமாளித்தால், சற்றும் தயங்காமல் இவர்கள் கேட்பது: "நோட்டைத்தாங்க; சில்லறையை நான் தறேன்."
நமக்குக் கோபம் வருமா; சிரிப்பு வருமா? ( ஆனால் நாம், பேந்த பேந்த முழிப்பது என்னவோ உறுதி-ஏனென்றால் நம் சட்டைப்பையில்தான் சல்லிகாசே இல்லையே!).
என்றாவது 50 பைசாதான் சில்லரை இருக்கிறது என்று கொடுத்தால், அதை வாங்காமல், வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள்! அவர்களுக்கு 50 பைசா காசில்லையாம்! "கடைத்தெருவில் 50 பைசாதானே கொடுக்குறாங்க" என்று நாம் கேட்டால், "அது கடைத்தெரு; இது வீடு" என்ற வியாக்கியானம் வேறு!

ரவுசு பார்ட்டியை பற்றி, அதாங்க - இந்த பூம் பூம் மாட்டுக் காரர்களை பற்றி சொல்லாமல் விட்டால் - இந்த பதிவுக்கே மதிப்பு இல்லாமல் போய்விடும். எப்பா! இவர்கள் செய்யும் ரவுசு இருக்கே - ஜக்கம்மாவின் பெயரை சொல்லிக்கொண்டு அடிக்கும் மோளத்தில் (பாவம் அந்த மாடு, இவர் சொல்லுவதற்கு எல்லாம் தலையை -தன் கழுத்து மணி குலுங்க- ஆட்டும்!?) - வீட்டில் தூங்கிகொண்டு இருக்கும் கைக்குழந்தையின் 'வீல்' சத்தம்; வயதானவர்களின் ஆயாசமான நெளிவு; நம்முடைய BP (blood pressure) அநியாயத்துக்கு எகிறிப் போய் (நம் செவிப் பறை கிழிந்து விடுமோ!?) "நிறுத்துயா, அடிக்காதே" என்று தொண்டை கிழிய கத்தினாலும், மாட்டுக்கார அய்யா காதில் வாங்க மாட்டார். ஏதும் கொடுத்து சமாதானப் படுத்தினாலே அடிப்பதை நிறுத்தி - நல்ல செய்தி சொல்லுவார்!! ஒருமுறை- சற்று முரட்டு சுவாபம் உள்ள- என் தம்பி, மாட்டுக்கார அய்யாவோட ரவுசு பொறுக்க முடியாம, ஆட்களை வைத்து பூம் பூம் மாட்டை அய்யாவிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி - சாங்கி (மாட்டுக்கறி business செய்பவர்) இடம் அனுப்ப ஏற்ப்பாடு செய்து விட்டான். விஷயம், என் காதுக்கு வர- என் தம்பியை கூப்பிட்டு 'பிச்சை எடுக்க வந்தவரிடம், நீ என்ன மல்லுக்கு நிக்கிறே' என்று சத்தம் போட, என் தம்பி ' இவன் எப்பொழுதுமே இந்த, நம் தெருவுக்குள் வரக்கூடாது; இதற்கு ஒத்துக்கொண்டால் மாட்டை திருப்பி தந்து விடலாம்- இல்லை என்றால் சாங்கியின் கசாப்பு கடை தான்' என்றான்-குரூரமாக சிரித்துக்கொண்டு. ஒருவழியாக சமாதானம் செய்து பிரச்னையை தீர்த்து.... இன்றைய திகதி வரை, அந்த பூம் பூம் மாட்டுக்காரர் நம் தெருவுக்கு மட்டும் வராமல் - மற்றைய தெருவிலெல்லாம், பூம் பூம் மாட்டோடு, வலம்வந்து மோளம் தட்டி பிச்சை எடுத்து வளமாக இருந்து வருகிறார்.
சில பிச்சைக்காரர்கள், தமது 'தொழிலை' முடித்துக்கொண்டு ஒதுங்குமிடம் சத்திரம்; அங்கு சாராயம் மற்றும் கஞ்சா எல்லாம் நடப்பதாக சிலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

சென்னை மண்ணடியில் ஒரு தாயும் மகளும் போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சை வாங்கிக் குவிக்கும் காசில், வட்டித் தொழில் செய்து பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்களாம்!
கிழவி ஒருத்தி சுமார் நாற்பது ஆண்டுகளாக அங்கப்ப நாயக்கன் தெருவில் 'பிச்சை பிழைப்பு' நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.
நம் ஊர்களில் வசூலாகும் பிச்சை-பெருந்-தொகைகளை கொண்டு, நம்மை சந்தித்து விட்டு போகும் பிச்சைக்காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ?

நமது பலவீனத்தை, இவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? அல்லது, நமக்கு இரக்க உணர்வு என்பதே இல்லாமல் போக வேண்டுமா?

No comments: