Thursday 5 August 2010

பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் பாலம்

பரங்கிப்பேட்டை- கிள்ளை

பாலம் பணி முடிந்து, சாலை அமைக்கும் பணி துரிதம்

பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் 20 கோடி மதிப்பிலான பாலம் கட்டும் பணி முடிவு பெற்று பாலத்தை இணைக்கும் சாலைகளை அமைக்கும் பணி இரண்டு பக்கங்களிலும் துரிதமாக நடந்து வருகிறது.

பரங்கிப்பேட்டையிலிருந்து கிள்ளைக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பேருந்தில் முட்லூர், புவனகிரி வழியாக சிதம்பரம் சென்று பிறகு கிள்ளைக்கு வரவேண்டியதாக இருந்தது. இதனால் கால விரயமும் பொருட்செலவும் ஏற்பட்டது. மேலும் கிள்ளை, பொன்னன் திட்டு, முடசல் ஓடை போன்ற சிறிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பரங்கிப்பேட்டையின் அரசு பள்ளிகளில் படிக்க வெள்ளாற்றில் படகுகள் மூலம் சென்று வந்தனர்.

பரங்கிப்பேட்டை மக்களுக்கும் அதை சுற்றியுள்ள கடலோர கிராம மீனவ மக்களுக்கும் மற்றும் கிள்ளை, அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மீனவ மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது 50 ஆண்டு கால கனவாகவே இருந்து வந்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆசியா வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 20 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு கடந்த 2007 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பணி துவங்கப்பட்டது. 2008 - ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் முடிப்பதற்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், பாலம் கட்டும்பணி ஆமைவேகத்திலேயே நகர்ந்தது. இயற்கை சீற்றங்களான மழை மற்றும் வெள்ளம் காரணமாகவும் இரண்டு ஆண்டுகள் இழுத்துச் சென்றது. தற்போது பாலம் கட்டும் பணி முழுவதும் முடிந்து பாலத்தினை இணைக்கும் வகையில் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சாலை போடப்பட்டு வருகிறது.

கிள்ளை பகுதி முடிந்து கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் பாலத்தின் நான்கு பக்கங்களில் 3 லட்சம் மதிப்பில் 6 அடி உயரத்தில் திருவாரூர் தேர் அமைக்கும் பணி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். புதியபாலத்தினை நேற்று முதல் பைக், சைக்கிளில் செல்பவர்கள் உபயோகித்து வருகின்றனர்.

வெள்ளாற்றில் பாலம், அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால் பரங்கிப்பேட்டை, அதன் சுற்று வட்டார மக்கள் மற்றும் கிள்ளை பகுதி மக்கள் என அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments: